என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 29 நவம்பர், 2012

தாய்மை


பெண்மையின் நிறைவு புதுசுமை ஏற்பது
நானும் சுமக்கிறேன் சுகமான வலியுடன்

நீ எனக்குள் விழுந்த நாள்முதல்
ஏழுலகச் சுகங்கள் எல்லாவற்றையும்
என்மேல் மட்டும்தான் பொழிகிறானோஎன்று
கடவுளைக்கூட கொஞ்சநாள்
கவனமாகக் கவனித்திருக்கிறேன்

உனக்காக உண்பதும் உன்னோடுவிழிப்பதும்
நீ புரண்டு படுக்கவே நான் புரளாமல் படுப்பதும்
எட்டி உதைக்கும் உன் குட்டிப் பாதங்கள்
வலிக்காமல் இருக்க வயிற்றை வருடிக் கொடுப்பதும்

என் மாற்றத்தைக் கண்டு நானே அதிசயித்திருக்கிறேன்.

கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத சுகத்தை
உள்ளில் உள்ளபோதே உன்னால்
கொடுக்க முடிகிறதே - எப்படி?

தாயாகாமலே தாய்மையை உணரும் வித்தையை
நான் கற்றது எப்போது?
யோசித்துக்கொண்டிருக்கையிலே இதோ...
பத்தாவது மாதமும் வந்து விட்டது.

உன் பிஞ்சு முகம் காண
நிமிடந்தோரும் துடிக்கிறேன்.

மழைவருவது எப்போதென்று
எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?

நீ நலமாக வெளிவந்தால் மொட்டை அடிப்பதாக
பாட்டி வேண்டிக் கொண்டிருக்கிறாளாம்.

நீ பிறக்கும் நாளன்று குறும்பாடு வெட்டி விருந்தாம் -
தன்பங்குக்கென்று தாத்தா சொல்கிறார்.

என்ன பெயர் வைப்பது? எப்படியெல்லாம் வளர்ப்பது?
ஆரம்பக் கல்வியின் அனுமதிச் சீட்டை
எந்தப் பள்ளியில் வாங்குவது - என்று
ஏக குழப்பம் ஆகியிருக்கிறார் உன் அப்பா.


நான் புரண்டு படுத்தால்
நஞ்சுக்கொடி உன் பிஞ்சுக்கழுத்தைச் சுற்றிவிடுமாம்

பிரசவ வலி புரட்டி எடுக்குமாம்
நீ பிறந்த பின் நான் பலமிழந்து போவேனாம் -
அடுத்த வீட்டுக்காரர்கள் கூட
அநியாயமாய் பயமுறுத்துகிறார்கள்

நீலவண்ணக் கண்களை நீ கொண்டிருப்பாயோ?
உன் அப்பாவைப் போலவே
உன் நாசியும் எடுப்பானதாயிருக்குமோ?

என் தங்க மகளின் தலைமுடி தொட்டால்
மயிலிறகு தன் கர்வத்தை விடுமோ?

மாருதியின் ஓவியம்போல்
முக அழகு ஒத்திருக்குமோ- இப்படி

எண்ணக் கலவைகளின்
வண்ணக் கனவுகள் ஓர்புறம்

ஆசையோடு போட்டியாய்
அவஸ்தைகள் ஓர்புறம்

நிற்கமுடியவில்லை நடக்க முடியவில்லை
உணவு ஏற்கவில்லை உறக்கமும் வருவதில்லை
படுக்க முடிவதில்லை புரளவும் இயலவில்லை

உதிரத்தின் ஓட்டம் ஒரு சீராய் இருப்பதில்லை
உள்மூச்சும் வெளிமூச்சும் ஒழுங்காகச் செல்வதில்லை  - இருந்தாலும்
உனக்காக எல்லாமும் ஏற்கின்றேன்.

ஆமாம்...என்கண்ணே-
ஏன் இன்னும் உறங்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?

நீ புரண்டுபடுக்கப்
போதுமான இடம் இல்லையோ? அல்லது
 நான் உண்ணும் உணவால்
உன் சின்ன வயிறு நிரம்பவில்லையோ? பின் என்ன?

ஓ... என் எண்ண ஓட்டம் உனக்குள்ளும்
பாதிப்பு ஏற்படுத்துகின்றதோ?

என்ன செய்ய?

ஏழையாய்ப் பிறந்துவிட்டால்
எதுகுறித்தும் கவலையில்லை
செல்வந்தராய் இருந்திருந்தால்
செலவு பற்றிக் கவலையில்லை
நாம்தான் நடுத்தரவர்க்கத்து நகல் ஆயிற்றே

முதல் தேதியை எட்டிப்பிடிக்க
எத்தனை வேகமாய்த் தள்ளுகிறோம் மற்ற தேதிகளை?

இருபத்தி ஆறு -
நீ பிறக்கப்போகும் நாளென்று
குறித்துள்ளாரே மருத்துவர்

மாதக்கடைசியாயிற்றே..
மருத்துவத்திற்கு என்ன செய்ய? என்ற கவலையா?

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமே இலவசமாம். -
ஆசுபத்திரி சிகிச்சை இல்லையாம் - என்ற ஆதங்கமா?

ஒன்று செய் -

முதல் தேதி வரும் வரை
என் முகம் காணும் ஆசையை
முழுதாய்த் தள்ளிவை

ஏன் தெரியுமா?
உன் ஒவ்வொரு பிறந்தநாளும்
ஒற்றைத் தேதிக்குள் வந்தால் தானே
புத்தாடை பரிசுகள் அந்நாளே கிடைக்கும்?

அதனால் -
சம்பளம் வாங்கும் வரை சமர்த்தாய் உள்ளிரு .

இன்னும்...
நீ கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய சில
கட்டாயக் கடமைகள் உனக்குண்டு

வயிற்றைக் கிழித்துக்கொண்டு
வெளிவந்து வருத்தாதே
வலிதாங்க முடியும் ஆனால் விலை தாங்க முடியாது

தொப்பூழ் வழிகிட்டும் ஆகாரம் குறைவென்று
குருதி குடித்துவிடாதே!

விரதமாய் இன்னும் ஒருவாரம்
வெளிவரும் நாள்வரை வாய்திறக்காமல்
உன் விரதத்தைக் காப்பாற்று!

நன்றி என்னுயிரே!
என்நிலை நீ புரிந்ததற்கு!

(என்னுடைய "என் தவத்தில் என்ன குறை?" என்ற நூலிலிருந்து (எழுதிய வருடம் 2003))

2 கருத்துகள்: