என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
பிற கவிஞர்கள் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற கவிஞர்கள் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜனவரி, 2013

கடலலையின் வழிநெடுகே....!

(ரசித்த கவிதை : புலவர் திரு. சூசைமிக்கேல் அவர்கள் எழுதிய "எண்ணப்பரல்களில் இன்னும் சில.... :கவிதைத் தொகுப்பிலிருந்து ...)


கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்...
         கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள்...
படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள்...
         பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந்நிகழ்ச்சிகள்

என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில்
         எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில்...
 சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ
         செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?

வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ?
         வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ?
ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்டதெலாம் உண்மையோ
          ஒருமரத்துப் பறவைகட்கு  முடிவிலாத கொடுமையோ ?

இந்தியனாய்ப் பிறந்ததினால் தமிழனுக்கு மௌனமா?
         இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்கு மரணமா?
கண்திறந்து பார்க்க இங்குத் தமிழனுக்கே  வருத்தமா?
         கனன்றெழுந்து கடிந்துரைக்கத்  தலைவர்கட்கும் தயக்கமா?

மாடுமனை வீடிழந்து மறுகி வெந்து சாவதோ?
         மண்டபத்து அகதி முகாம் அடிமைமுகாம் ஆவதோ?
தேடிவந்த சோதரரைத் தேற்றுவதும் குற்றமோ?
         தேசபக்தி பேசுவோர்கள் சிங்களர்தம் சுற்றமோ?

மண்மூடிப் போகுதடா  மறத்தமிழன் குடிசைகள்
         மாற்றுவழி கேட்குதடா புத்தனின் அகிம்சைகள்
கண்மூடித் தாக்குதடா காடையனின் முப்படை
         கௌதமனே உன்மதத்தைக் கழுகுவசம் ஒப்படை

சர்வதேச நாடுகளும் தமிழருக்(கு)  எதிரடா
         சமாதானம் என்பதெலாம் கடைந்தெடுத்த புதிரடா
பர்வதம்போல் பேச்சின்றிக் கிடப்பது பாரதமடா
         பைந்தமிழர் கண்களிலே வேண்டுதல் விரதமடா

எதைப்புகன்றும் தமிழர்மீது பரிவு இல்லை பாரடா
         எந்த மன்றம் இவர்களுக்குத் தீர்ப்பு கூறும்  கேளடா
இதைவிடவும் தமிழனுக்கு என்ன உண்டு தீங்கடா
         இரக்ககுணம்  பூமியிலே எங்கிருக்கு போங்கடா !


-  புலவர். தொ. சூசைமிக்கேல் ,





வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தமிழர்களின் புத்தாண்டு எது?

அருமையான ஒரு கட்டுரை படித்தேன். அதை என்னுடைய நண்பர்களுக்கும் பகிரவேண்டுமேன்று எண்ணியதால் அதை அப்படியே இங்கு பதிக்கிறேன்



தமிழர்களின் புத்தாண்டு எது? ...... வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை! இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடைமுறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது. மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.” மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட்பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான் தமிழன். “தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.” பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும். பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள். இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. ஆரிய முட்டாள்களின் இந்து ஆண்டு முறையை (சித்திரை) பின்பற்றும் முட்டாள் கூட்டம் (இந்து மத வெறி அமைப்புகளின் தூண்டுதலால் அவர்களின் மகுடிக்கு மயங்கி ஏமாந்த கூட்டம்) கூறும் காரணப்படி பார்த்தாலும் யாரும் ஒரு துவக்கத்தை உச்சியில் துவக்குவதில்லை. ஒரு நாள் பொழுது துவங்கும் பொழுது ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவக்குவதில்லை. மாறாக ஒரு நாள் நள்ளிரவில் துவங்கி சிறிது சிறிதாக விடியத்துவங்கி அரை நாள் முடியும் பொழுது ஞாயிறு உச்சிக்கு வருகின்றது. மீதும் ஞாயிறு சிறிது சிறிதாக மறையத் துவங்கி நள்ளிரவில் அந்த நாள் முடிவடைகின்றது. அது போலவே ஆண்டும் ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவங்குவதில்லை. உலகில் எந்த இனமும் கொடும் கோடை காலத்தில் தங்கள் ஆண்டினை துவங்குவதில்லை. இந்த முட்டாள் ஆரியன் அவன் இருந்த பகுதியில் பின்பற்றிய ஆண்டு முறையை இங்கும் வந்து புகுத்திட தமிழா அதை பின்பற்ற நீ என்ன முட்டாளா? உன்னை சுற்றி இருக்கும் வெற்றினத்தார்கள் பலர் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்தி சித்திரைதான் ஆண்டின் துவக்கம் என்று கூறி உன்னை ஏமாற்றி குழப்புவார்கள். கவனமாயிரு. உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். ‘மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன் ஆண்டு என்று அழைத்தான் என திரு. வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர். "வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன. 1நாழிகை-24 நிமிடங்கள் 60நாழிகை-1440 நிமிடங்கள் இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின்படி பார்த்தால் 1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள் 24 மணித்தியாலங்கள் - 1 நாள் இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது. நாட்களை இவ்வாறு கணக்கிட்ட தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான். 1.இளவேனில்-தை - மாசி மாதங்கள் 2.முதுவேனில்-பங்குனி - சித்திரை மாதங்கள் 3.கார்-வைகாசி – ஆனி மாதங்கள் 4.கூதிர்-ஆடி - ஆவணி மாதங்கள் 5.முன்பனி-புரட்டாசி – ஐப்பசி மாதங்கள் 6.பின்பனி–கார்த்திகை - மார்கழி மாதங்கள் பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர். காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக்கொண்டான். தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர். தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக கால காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றது. இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை - தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா? தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (calendrier / calendar) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து 'ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன. இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? 'horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope, horodateur, hour, heure, year...' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த 'horos' என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி - நா. கதிரைவேற்பிள்ளளை) இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'horos'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின்பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும். வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர். கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று. ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14) தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை. எனவே, இனி ஒரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம் "திருவள்ளவர் ஆண்டே இனி நம் ஆண்டு! சுறவத் திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின் முதல் நாள். சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள திங்கள்களின் தனித்தமிழ்ப் பெயர்களையே நாம் இனி பயன்படுத்துவோம். கிழமைகளின் பெயர்களையும் தனித்தமிழிலேயே எழுதுவோம் ..." என்ற உறுதிமொழியை இன்று எடுப்போம்! வடமொழியோ பிறமொழியோ விட்டொழிப்போம்! நம் அருமைத் தமிழ் மொழியாலே நாம் செழிப்போம்! வாழ்க திருவள்ளுவர் ஆண்டு, வளர்க நம் தனித்தமிழ்ப் பற்று! வழக்குத் தமிழ் - தனித்தமிழ் தை - சுறவம் மாசி - கும்பம் பங்குனி - மீனம் சித்திரை - மேழம் வைகாசி - விடை ஆனி - இரட்டை ஆடி - கடகம் ஆவணி - மடங்கல் ஐப்பசி - துலை புரட்டாசி - கன்னி கார்த்திகை - நளி மார்கழி - சிலை கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் ஞாயிறு - ஞாயிறு திங்கள் - திங்கள் செவ்வாய் - செவ்வாய் புதன் - அறிவன் வியாழன் - வியாழன் வெள்ளி - வெள்ளி சனி - காரி மை.அறிவொளி நெஞ்ச குமரன் (நன்றி கீற்று வலைத்தளம்) www.eelavenkai.blogspot.com

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

“என் இனத்தார் விட்டுவிலகும் விளையாட்டும் கலைகளும்”


(குவைத்தில் வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் நடத்திய கவியரங்கத்தில் “என் …” என்ற தலைப்பில் 24-11-2011 –அன்று வாசித்த கவிதை.)


 வாழ்த்து:


பாரெங்கும் பரவியுள்ள பைந்தமிழாள் உந்தனுக்கும்
ஈரைந்து மாதங்கள் எனைச்சுமந்த தாய்மைக்கும்
சீராட்டிச் சிற்றறிவைச் செப்பனிட்ட தந்தைக்கும்
நீராட்டிப் பாதமலர் நனைக்கின்றேன் நான்!


அவையடக்கம்:

மங்கிடாத தமிழாலே மண்ணிசைத் திருவிழாவை
தங்கும்படி மனத்தினிலே தொகுத்துரைக்கு மெனையழைத்து
இங்கிருக்கும் கவிஞரோடு என்கவிதை வேண்டுமெனும்
அங்கிருந்து வந்தகவி கபிலனுக்கும் என்நன்றி!

நன்றிமலர் துவியபின் என்தமிழின் வாசனையை
இன்றிந்த அரங்கினிலே நிறைத்திடவும் முயலுகின்றேன்
“என்”என்ற தலைப்பினிலே எனைப்பாட அழைத்தவுடன்
எண்ணத்தில் தோன்றியதோ என்கலையும் விளையாட்டும்.
                ழூழூழூழூழூழூழூ

கவிதை 

தொலைக்காட்சிப் பெட்டியிலும் தொலைபேசி அரட்டையிலும்
அலைகடலாய் கணினிவந்து ஆரவாரம் செய்வதிலும்
இலையென்று ஆனதுநம் கலைகளோடு விளையாட்டும்
குலைகிறது அதனாலே கேள்வியின்றி தேகபலம்!  (1)

ஓப்பற்ற வீரராக உயர்தமிழர் வாழ்ந்ததாக
முப்பாட்டன் காலத்து வரலாறும் உரைக்கிறது
திறம்செறிந்த ஆண்போலே பெண்ணிருந்த தாலன்று
முறம்கொண்டு  புலியடித்து விரட்டியதாய் கதையுண்டு(2)

இத்தனை பலம்கொண்ட எம்முன்னோர் வழிவந்தோர்
சொத்தையாகிப் போனதின்று ஏனென்று ஆராய்ந்தால்
மொத்தமாக விட்டுவிட்ட விளையாட்டும் கலைகளுமே
அத்தனைக்கும் காரணமாய் ஆனதுதான் வேதனையே! (3)

கால்கொலுசு சத்தமிட களங்கமற்ற சிரிப்புடனே
பால்மறந்த பிஞ்சுமுதல் பள்ளிசெல்லும் சிறுமிவரை
மறைந்தோடி யாடியதும் மணியூஞ்சல் ஆட்டியதும்
மறந்திடத்தான் இயலுமோ மற்றேதும் ஈடாமோ?(4)

இடைசெருகிய தாவணியும் இரட்டைசடை பின்னலோடும்
இடைமெலிந்த நங்கையர்கள் தோட்டத்திலே ஒன்றுகூடி
கண்கட்டி ஆடியதும் கயிறுதாண்டி குதித்ததையும்
நொண்டியாடி நின்றதையும்; நினைக்கையிலே இனிக்கிறது!(5)


பந்தடித்து விளையாடிய பருவமங்கை போலன்றி
வம்புபேசும் நேரந்தனில் ஒன்றாகச் சேர்ந்திருந்து
வெற்றிலையை மென்றபடி உட்கார்ந்த இடத்தினிலே
ஒற்றுமையாய் மூத்தபெண்டிர் விளையாடினர் பல்லாங்குழி! (6)

சிறுவரெல்லாம் சேர்ந்துஇரு கூட்டமாகப் பிரிந்துநின்று
சிறுகுச்சியொன் றுபோடஅதைச் சடுதியிலே அடித்துவிட்டு
சிறுகுழியில் வீழாமல் வேகமாகத் தடுக்குமந்த
சிறப்பான கில்லியாட்டம் சிந்தைக்குள் சிலிர்க்கிறது! …..(7)

சின்னஞ்சிறு பாலகர்கள் வரிசையாக குனிந்திருக்க
தன்கையை ஊன்றிவைத்து மற்றவர்கள் தாண்டிவர
சின்னதான கால்படாது சிரத்தையோடு ஆடுமந்த
பொன்குதிரை தாண்டுமாட்டம் இன்றெங்கே இருக்கிறது? …..(8)

தொட்டுவிட முயலும்போது காலிழுத்து விட்டபின்பு
சுற்றிவளைத் தெல்லோரும் தூக்கியெடுத் தப்படியே
துள்ளுகின்ற எதிராளைத் தொடவிடாது கோட்டினையே
எள்ளிவிளை யாடுமந்தச் சடுகுடுவும் போனதெங்கே? …..(9)

மஞ்சளோடு கருமையை உடல்முழுதும் பூசிக்கொண்டு
அஞ்சியோடும் குழந்தைகளைச் சிலநேரம் அழவைக்கும்
நெஞ்சுவிம்மும் சீற்றத்தோடு ஆடும்புலி யாட்டமட்டும்
எஞ்சியள்ள திப்போதும் எங்கோசில இடந்தன்னில்! …..(10)

கொலகொலயா முந்திரிக்கா கோலிகுண்டு பம்பரமும்
நிலாக்கும்பல் டியாண்டோல் தட்டாங்கல் தாயத்தோடு
ஆடுபுலி ஆட்டமெல்லாம் அவ்வப்போ நினைவினிலே
தேடித்தேடிப் பார்க்குமாறு தொலைந்தநிலை தானின்று ...(11)

இதுபோன்ற விளையாட்டு ஏராளம் இன்னுமுண்டு
இதையெல்லாம் விட்டுவிட்டு கணினியிலே கால்பந்தும்
முகநூலில் கட்டிடமும் கட்டிவிளை யாடுவதால்
தெருவெல்லாம் சிறுவரின்றி வெறிச்சோடி இருக்கிறது…..(12)

தமிழர்களின் கலைகளெல்லாம் தானமாகத் தந்துவிட்டு
இமியளவும் கவலையின்றி நாமிருக்கும் காரணத்தால்
களரியோடு கதகளியும் வர்மக்கலை நாட்டியமும்
மலையாளக் கலையாகி மர்மத்தோடு சிரிக்கிறது! …..(13)

கராத்தேவும் குங்ஃபூவும் ரெஸ்ட்லிங்கும் அதுபோலே
பெயர்மாற்றம் பெற்றுவிட்ட தமிழ்நாட்டுக் கலைகள்தாம்
வெளிநாட்டு  மோகத்திலே அதன்பின்னால் ஓடினாலும்
பலமற்றதே கத்தினால தைப்படிக்க முடிவதில்லை!…..(14)

வேறினத்தோர் கலையென்றால் வெறிகொண்டு ஏற்கின்றோம்
வேரூன்றிய நம்கலையை வெட்கமென விடுகின்றோம்
சீர்மிக்கக்  குலத்துதித்த சிந்துவெளிக் கலைகளெல்லாம்
சீர்குலைந்து போவதுதான்; சிறிதேனும் நியாயமா?  ….(15)

கோலெடுத்துச் சுழற்றுகின்ற சிலம்பாட்டம் சுருளியோடு
வாளெடுத்துச் சுழற்றுகின்ற வாள்வீச்சும் மறந்துவிட
பாறையினைத் தூக்கிதனது வீரத்தை நிலைநாட்டிய
தேரிழுத்த சீலர்குலம் சீக்காளி ஆனதின்று!  …(16)

சுற்றிவந்து எத்தனைதான் நடைப்பயிற்சி செய்தாலும்
சற்றுமந்த சர்க்கரையும் குறையாமல் தவிக்கின்றான்
மற்றுமந்த எரிச்சலிலே குருதிகொஞ்சம் கொதித்தபின்தான்
பற்றுவந்து விடுகிறது கேழ்வரகு கம்புமீது!… (17)

விருதுக்கு மட்டுந்தான் விளையாட்டென் றாகிவிட
விரும்பியவர் மட்டும்சில விளையாட்டைப் பயில்கின்றார்;
குறிப்பிட்ட விளையாட்டை மட்டுமவர் ஏற்றதனால் -(நான்)
குறிப்பிட்ட ஆட்டமெல்லாம்  நியாபகங்கள் ஆனது!   (18)

விரலசைவில் உலகம்தான் மறுக்கவில்லை ஏற்கின்றேன்
விரல்மட்டும் அசைந்துகொண்டு உடலில்பல மில்லையென்றால்
வெறுதாவாய்ப் போய்விடும்நம் விஞ்ஞானமும் வளர்ச்சியும்
வெறும்வார்த்தை யில்லையிது விளையாட்டை ஏற்றுவிடு…….(19)

கலைகளையும் விளையாட்டையும்; கைவிடாது பின்பற்றி
பலமிக்க சந்ததியைப் பாருக்கு நாம்கொடுப்போம்
அறிவோடு ஆற்றலும் அவனியிலே மிக்கவர்கள்
தரமானத மிழர்களே எனவியக்க வாழ்ந்திடுவோம்! (20)

லதாராணி பூங்காவனம்

ழூழூழூழூழூழூழூ