என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 23 ஜூன், 2011

காளமேகப்புலவர் -சிலேடைப் பாடல்கள் (பாம்பும் எள்ளும்)

காளமேகப்புலவர் -சிலேடைப் பாடல்கள் (பாம்பும் எள்ளும்)

நான்  மிகமிக  ரசிக்கும்  புலவர்களில்   அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்  
இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம் ஆவார்.
அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.
இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!  
விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும்.  அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்
எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின்  திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை   மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக