என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 7 ஏப்ரல், 2012

உடல் தானம் செய்வோம்!

சென்ற மாதம் திருநெல்வேலியில் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசிவிட்டு வந்தேன். அன்றிலிருந்து  உடல் தானத்தைப் பற்றி என்னுடைய வலைத்தளத்தில் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன்.... ! பேசியதை பதிவதைவிட  இதை ஒரு கவிதையாக்கினால் என்னவென்று தோன்றியது... முயன்றேன்.... :)


உடல் தானம் செய்வோம்!



மின்சாரம் பெட்ரோல் கதிர்வீச்சின் துணையோடு
ஒன்றிவிட்ட வாழ்க்கையிலே  மனிதகுலம் ஓடுவதால்
ஒன்றன் பின் ஒன்றாக முளைக்கின்ற நோய்களெலாம்
மென்று மென்று தின்கிறது  மனிதனையே அழிக்கிறது!

தும்மினாலே கும்பிட்ட  தெளிவற்ற மக்களெல்லாம்
அம்மைநோயும் காலராவும் ஆண்டவனின் லீலையென்றும்
தெருக்கோவில் மரத்தடியில் படுத்தால்நோய் போகுமென்று
மருத்துவரை நாடாமல் மாய்ந்துபோன காலமுண்டு  !

கண்பார்வை அற்றோர்கள் கைகால்கள் இழந்தோர்கள்
நுண்குழாய் அடைப்புகளும்  நீர்க்காய்ச்செயல் இழப்புமென
எண்ணற்ற நோய்களெல்லாம் தெய்வத்தின் செயலென்று
ஆண்டவனின் பேர்சொல்லி மாண்டவர்கள் ஏராளம்

இருபதாம் நூற்றாண்டில் இதுசற்றுக் குறைந்த பின்தான்

அறிவியல் வளர்ச்சியில் ஆண்டவனை வீழ்த்திவிட்டு 
மருத்துவத் துறை செய்யும் மகத்துவம் உணர்ந்தார்கள் 
குறையற்ற வாழ்விற்கு அறிவியலைக் கொண்டார்கள்

  
அக்கக்காய்ப் பிரித்தெடுத்து அங்கங்களை மாற்றி வைக்கும்
சிக்கலான சிகிச்சையெல்லாம் செயல்படுத்தி வெற்றிகண்டும்
தக்கமருந்து  கொடுத்து நமைத் தாக்கவரும் நோயோழிக்கும்
பக்குவத்தைக் கைக்கொண்டு வெற்றிபெற்ற மருத்துவந்தான்

நாளொன்றாய் தோன்றுகின்ற பேரறியா நோயெல்லாம்
வாராது தடுத்திடவும்  வந்தவற்றை ஒழித்திடவும்
போராடிக் கொண்டு புது மருத்துவத்தை செயல்படுத்த
ஆராய்ச்சி செய்துகொண்டு  அதில்  மூழ்கி இருக்கின்றார்

போலியோவை ஒழித்ததுபோல் புற்றுநோயும் ஒழியவேண்டும்
அல்சீமர் போன்ற இன்னும் அறியாத நோய்களெல்லாம்
இல்லாது ஒழிப்பதற்கும் இருப்போரைக் காப்பதற்கும்
நில்லாமல் ஆராய்ச்சி நேர்த்தியாய்த் தொடர்வதற்கும்

வேண்டுமென்று கேட்கிறது மனிதவுடல் தானமாக

மாண்டுபோன பின்னாலே மனிதவுடல் கொடுப்பதனால்
மருத்துவ மாணவர்கள் மனிதவுடற் கூறுபற்றி
வெருக்கெனப் படித்து விளங்கிடுவர் நன்றாக

இறந்தவுடல் பயன்பாடு இன்னமட்டும் என்றில்லை
செயலிழந்த மூளையோடு மனிதவாழ்க்கை முடிந்தாலும்

சிலமணி நேரங்கள்  தொடர்ந்தியங்கும்  உள்ளுறுப்பு  
பலர்வாழ்க்கை பெறுவதற்கு இயற்கைதந்த அன்பளிப்பு 

இறந்தவுடன் குறிப்பிட்ட நேரத்தில் கொடுத்திட்டால்
இயங்குகின்ற கல்லீரல் நுரையீரல், சிறுநீரகம் மற்றும்
இதயமும் எலும்பு மஜ்ஜை கண்மணி போன்ற அரும்
உறுப்புக்கள் எல்லாம்வேறு   உடலுக்குள் பொருத்திடலாம்  

அறுவைசெய்து பழகவும் சிகிச்சையை எளிதாக்கவும்
புதுமருந்துகள் சோதிக்கவும் எனப்பயன் மிக்கயிந்த
அரிதான பொருளான உயிரற்ற உடலினைநாம்
எரிக்காமல் புதைக்காமல் அறிவியலுக் களித்திடுவோம்

நோயற்ற குறையற்ற ஊனமற்ற சந்ததியாய் 
வருங்கால சந்ததியர்  நலமாக  வாழ்வதற்கு
உயிரற்ற  நம்முடலைத் தானமாகக் கொடுத்திடுவோம்
உயிருள்ள  போதேயிந்த உறுதியான  முடிவெடுப்போம்!


4 கருத்துகள்:

  1. நான் மதுரையில் வசிக்கிறேன்.நான் என்னுடைய உடலை எனது மரணத்திற்குப் பின் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்க விரும்பி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.அவர்கள் என்னை அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி எனது சுய முகவரியிட்ட அஞ்சல் கவருடன் விண்ணப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள். அதன்படியே 12/12/2012 விண்ணப்பித்தேன். இதுவரை எந்தப் பதிலும் இல்லை. இனி மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.எனது வயது 73.ஆகவே இது பற்றி தங்களால் எதாவது செய்ய முடிந்தால் என்னைக்குத் தெரியப் படுத்தவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நான் மதுரையில் வசிக்கிறேன்.நான் என்னுடைய உடலை எனது மரணத்திற்குப் பின் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்க விரும்பி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.அவர்கள் என்னை அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி எனது சுய முகவரியிட்ட அஞ்சல் கவருடன் விண்ணப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள். அதன்படியே 12/12/2012 விண்ணப்பித்தேன். இதுவரை எந்தப் பதிலும் இல்லை. இனி மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.எனது வயது 73.ஆகவே இது பற்றி தங்களால் எதாவது செய்ய முடிந்தால் என்னைக்குத் தெரியப் படுத்தவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஐயா, தங்களின் தொலைபேசி எண்ணை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். விவரங்களைத் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வோம். நன்றி

    e-mail : latharani.kwt@gmail.com

    பதிலளிநீக்கு