என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

கள்ளிப் பால் சுரக்கிறது….!


கூண்டில் நிற்கிறாள்
குற்றவாளியாய்…

பெண்சிசுவைக் கொன்ற குற்றம் அவள் மீது

பாவி…!
பச்சை மண்ணைக் கொல்வதற்கு
எப்படித் தான் மனம் வந்ததோ..

வளர்க்கத் துப்பில்லாதவள்
எதற்குப் பெற்றுக் கொள்ள வேண்டும்?

எத்தனை பேர் குழந்தை பாக்கியமில்லாமல்
ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்…
அவர்களுக்குப் பிறந்திருக்கலாமே அந்தக் குழந்தை

எவன்கிட்டயோ ஏமாந்து
பெத்துகிட்டு …. த்தூ…மானங்கெட்டவள் …

இவளையெல்லாம் -
தூக்கில் போடவேண்டும்

வேடிக்கைப் பார்க்க வந்திருந்த ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாகப் பேசிக் கொண்டிருக்க…

வெறித்துப் பார்த்திருந்தவளை
நீதிபதி கேட்கிறார்…

எதற்காக அந்த சிசுவைக் கொன்றாய்?

இத்தனை நேரம் -

பட்டினி சுமந்த வயிற்றோடும்
துக்கம் சுமந்த கண்களோடும்

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தவள்

மௌனம் சுமந்த வாய் திறந்து சொல்கிறாள்…

குழந்தையை –

பட்டினியில் சாகவிட மனம் வரவில்லை
கொஞ்சம் பால் குடித்துவிட்டாவது
சாகட்டுமே என்றுதான் கொடுத்தேன்….

கள்ளிச் செடியின் காம்பில் சுரக்கும் பால்
என் மார்பில் சுரக்கவில்லையே….. நான் என்ன செய்ய?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக