என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?


வருடங்கள் தோறும் வந்து”(உ)வந்து” போகின்ற

     வீரர்குல பண்டிகையாம் தைப்பொங்கலே - நீயும்

வருந்தும்படி எமதுவாழ்க்கை மாறியதை நீயறிய

     வரிசையிட்டுக் கூறுகின்றேன் வெள்ளைப் பொங்கலே! (1)


வயிறார உண்பதற்கும் வக்கில்லா நிலைமையிலே

     விவசாயி இன்றுள்ளான் தைப்பொங்கலே – அவன்

பயிர்வளர்த்த இடங்களிலே பாதியிடம் கட்டிடமாய்

     பணக்காரன் ஆக்கிவிட்டான் பானைப் பொங்கலே!.....(2)



விடுபட்ட இடத்தினிலே விதைவிதைத்து ஓய்ந்தபின்னே

     வளர்த்திடத்தான் நீரில்லை தைப்பொங்கலே – அதை

விடுவதற்கு நீதிமன்றம் ஆணையிட்ட பின்னாலும்

     விடமாட்டேன் என்கின்றான் வாகைப் பொங்கலே!.....(3)


கொஞ்நஞ்ச இடத்தினிலே கரும்புமஞ்சள் பயிர்செய்து

     வாஞ்சையோடு வருடிவிட்டால் தைப்பொங்கலே ­– அந்த

மஞ்சளெல்லாம் மருத்துவத்தின் தேவைக்காக வேண்டுமென்று

     வெளிநாட்டான் வாங்குகிறான் வீரப் பொங்கலே!.......(4)


நாட்டிலுள்ள பயிர்நிலங்கள் நாகரீக வளர்ச்சியிலே

     நகரமாகிப் போனதுவே தைப்பொங்கலே - இப்போ

காட்டினிலே பாத்திகட்டிப் பயிவளர்க்கும அவலத்தினை

     கர்வத்தோடு செய்கின்றான் கன்னிப் பொங்கலே ....(5)


காட்டுயானை ஓடிவந்து கரும்பிட்ட தோட்டத்திலே

     கதகளிதான் ஆடுதையோ தைப்பொங்கலே – நாம்

காட்டினிலே பயிர்வளர்த்து பணம்செய்யும் செயலையது

    கண்டுமனம் கொதிக்கிறதே கரும்புப் பொங்கலே! ....(6)


கதகளிக்குத் தப்பிவந்த கரும்பெல்லாம் சூளையிலே

     கட்டுக்கட்டாய் எரிகிறதே தைப்பொங்கலே – அந்தப்

பதமான கரும்பிற்குப் பாதிவிலை கூடஇல்லை

     பாரதத்தில் இந்தநிலை பருவப் பொங்கலே!.....(7)


வருமானம் இல்லாமல் விவசாயக் கடனுக்கு

     வட்டிகட்ட ஏலவில்லை தைப்பொங்கலே – பாதி

விவசாயி மனமொடிந்து விசமருந்திச் சாகின்றான்

     விளங்கிடுமா இவ்வுலகம் வெண்ணைப் பொங்கலே…..(8)


கேணியிலே நீரில்லை தூர்வாரப் பணமில்லை

     கழனிக்கும் உரமில்லை தைப்பொங்கலே - இங்கு

மாணியம் கொடுத்தாலும் மின்சாரம் காணாமல்

     மயங்கித்தான் விழுகின்றான் மாயப் பொங்கலே!.......(9)


சேற்றினிலே கால்வைத்து சோறுபோட்ட உழவனைத்தான்

     தேற்றிவிட யாருமில்லை தைப்பொங்கலே – அவன்

ஏர்க்கலப்பை எல்லாமே துருப்பிடித்து போனதினால்

     ஊர்நிலங்கள் வெடிக்கிறது வெற்றிப் பொங்கலே!.....(10)


தோரணமாய்க் கட்டிவைக்கத் துண்டுமஞ்சள் கரும்பின்றித்

     தோள்துவண்டு போகின்றோம் திருப்பொங்கலே - நமது

திருநாட்டின் நிலைமையின்றுத் தலைகீழாய் போனதினால்

     தித்திப்பாய் இருக்கவில்லை  இத்தமிழர் பொங்கலே!....(11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக