நேற்று 24/06/2016 வெள்ளிக்கிழமை அன்று கேரளா ஆலப்புழை லயன்ஸ் கிளப்பில் கேரளத்து ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் கே. ஆர். கௌரி அம்மா அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கியும் அவரிடம் ஆசிகள் பெற்றும் விருந்துண்டும் மகிழ்ந்து சென்றனர்.


வாழ்க்கையில் மிக அரிதான தருணமாக கௌரி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று அம்மா அவர்களுக்கு ஒரு பூங்கொத்துடன் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய "இராவண காவியம்" நூலையும் பரிசளித்தேன்.

இது தமிழ்ப் பேரரசன் இராவணன் காவியம் என்றும், உரைநடையுடன் கூடியது என்றும் கூறினேன். பிறகு புலவர் குழந்தையவர்களைப் பற்றி கேட்டறிந்தார். தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் என்று கூறினேன். சிறிது நேரம் புத்தகத்தின் தாள்களை பிரித்துப் பிரித்துப் பார்த்தார். கௌரி அம்மாவுடனே இருக்கும் அவரின் வழக்கறிஞர் திரு. சுனில் என்பவர் தமிழ் அறிந்தவர்கள் உள்ளார்கள் அவர்களிடம் கொடுத்து படித்துக் காட்டச் சொல்கிறோம் என்று கூறினார். அதன் பிறகே புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.

தந்தை பெரியார் மற்றும் நாகம்மையார் அவர்களுடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்த கௌரி அம்மா அவர்களின் 97 வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது உண்மையிலேயே கிடைப்பதற்கறிய அரியதருணம். அந்த விழாவில் கௌரி அம்மா அவர்கள் தன்னுடைய கையால் எனக்கு "கேக்" ஊட்டிவிட்டார். மிக மகிழ்வான அந்த நேரமும் பிறகு அவருடன் சேர்ந்து மீன், இறைச்சி மற்றும் பலவகையான உணவுகளுடன் கேரளாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலப்புழா அம்பலப் பாயாசத்துடன் சேர்ந்த "கேரள சத்யா" (கேரளாவின் பாரம்பரிய உணவுகள் கொண்ட விருந்து) உண்டு உவந்து வந்தேன்.
இந்தியாவிலேயே கௌரி அம்மாவைப் போன்ற மிக்க அறிவும் தைரியமும் உள்ள வேறு பெண்மணி எனக்குத் தெரிந்து இல்லையென்றே கூறுவேன். இந்தியாவிற்குக் கிடைத்த போற்றிப் பாதுகாக்கவேண்டிய பெரிய பொக்கிஷம் கௌரி அம்மா. இவர் இன்னும் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு தான் பெற்ற அனுபவங்களையும் அறிவுரைகளையும் பகிர்ந்து இன்புறவேண்டும் என்று இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
லதாராணி பூங்காவனம் ,
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக