என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 13 மே, 2021

//அவசரமும் ஆழ்ந்துணராமையும் ஆபத்தே....!//


நம் மக்கள் எதையும் கூர்ந்து கவனிப்பதில்லை, ஆழ்ந்து படிப்பதில்லை என்பதற்கு ஆதாரமாக விளங்கியது நேற்றைய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அய்யாவின் பதிவு. 

திருமிகு இலங்கை ஜெயராஜ் அவர்கள், ரங்கராஜன் என்ற தமிழறிஞரின் இழப்பிற்கு எழுதிய இரங்கற்பா, அய்யாவின் மாணவர்களால் இயக்கப்படும்  Kambavarithy Ilankai Jeyaraj என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த இரங்கற்பா எழுதியது கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் என்று 

'இரங்கற்பா எத்தனைதான் பாடுவோமோ?- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்  என்று மிகத்தெளிவாகவே குறிக்கிறது. 

அது மட்டுமல்லாது, அந்த இரங்கற்பாவில் கடைசியில்..

//'இரங்க ராஜன்' என்னும் அறிஞன் போனான்

எம் இதயம் பதிந்திருந்த ஏந்தல் போனான்//

என்றும் மிகத் தெளிவாகவே இரங்கராஜன் என்பவருக்கான இரங்கற்பா என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்,  இதை எதையும் ஒழுங்காகப் படிக்காமல்... தலைப்பை மட்டும் படித்துவிட்டு,கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்து பலரும்  அதிர்ச்சியுற்றதாகவும், மனவேதனை அடைவதாகவும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை.... தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்...

ஒரு பதிவை ஒழுங்காகப் படிக்கும் அளவுக்குத் திறமையோ தகுதியோ அற்றவர்களா இவர்கள்? அல்லது ஒரு செய்தி அறிந்தால் அது உண்மையா  என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவும் அற்றவர்களா? அல்லது அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் அவ்வளவு துரிதகதியில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்துகொண்டிருக்கிறார்களா?

என்ன சொல்வது? உண்மையிலேயே வருத்தமாக உள்ளது... நம் மக்களின் செயல்களும் சிந்தனைகளும் செல்லும் பாதை ஆபத்தானதாகவே இருக்கிறது.   அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு வருத்தம்தெரிவித்த மக்களை பார்த்து வருந்துகிறேன்.... 

மக்களின் அறியாமையும், அவசரமும்... எதையும் ஆழ்ந்துணர்ந்து படிப்பதில்லை என்பதும்  உண்மையிலேயே வேதனையளிக்கிறது. 


பின் குறிப்பு;

இப்படி அரைகுறையாகப் படித்துவிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் தமிழ் வல்லுநர்களை நினைத்து,  ஒரு இரங்கற்பாவையே ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத இவர்களிடம்.... இத்தனை வருடமாக நான் எடுத்துச்சொன்ன கருத்துக்கள் எப்படிப் போய்ச்சேர்ந்தனவோ என்று  கம்பவாரிதி அய்யா அவர்கள் பேரதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. 

- கவிஞர்.  லதாராணி பூங்காவனம் , எம்.ஏ ., எம்.காம். ,பி.எச்டி.,

ஆற்காடு  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக