என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

வியத்தகு வள்ளுவம்!

  வியத்தகு வள்ளுவம் (குறளின் குரல் ) 
-------------------------------------------------------------------------
(அறுசீர் விருத்தம்)                                                                      

முகவரி ஆகி நின்று  
.       முழுஒளி வீசி மின்னும் 
மிகமிகப் பழமை யான 
.      மாத்தமிழ் இழையால் நெய்த 
தகவுறு துத்தம் போன்ற 
.       தப்பிலாச் செப்ப லோசை 
செகமது முழுதும் நின்று 
.       செம்மொழி பகர்தல் காணீர்!     ….….(1)

கதைகளின் நீள மில்லை 
.       காவியம் போலு மில்லை 
இதையிவன் அறிவ தற்கு 
.       இருவரி போது மென்று 
சிதைவுறாத் தமிழில், மெச்சும் 
.     சிறப்புடன் வனைந்து வைத்த 
புதைபொருள் உறைந்து நிற்கும் 
.     பொலிவுறு பேழை பாரீர்!            ……(2)

அறம்பொருள் இன்பம் வீடு 
.       அருந்தமிழ் விளைந்த காடு 
மறத்தமிழ் மக்கள் வாழ்வின் 
.       மாட்சிமை கூறும் ஏடு 
பிறன்மனை நோக்கல் குற்றம் 
.       பிறன்பொருள் கொள்ளல் கேடு 
அறவுரை சொல்லும் பாங்கு 
.        ஆமெனில் விலகும்  தீங்கு. ……..(3)


திறனறி என்று சொல்லும் 
.       திருந்திவாழ் என்றும் சொல்லும் 
பிறழிலா வாழ்வைச் சொல்லும் 
.        பிறவுயிர் காக்கச் சொல்லும் 
உட்பகை விலக்கச் சொல்லும் 
.        உறவுகள் பேணச் சொல்லும் 
வெட்டுக சோம்பல் என்று 
.         வெற்றிக்கு வழியும் சொல்லும் ………….(4)

சொற்றிறம் பாமை என்றும் 
          சொல்லிலே திருத்தம் என்றும் 
கற்றிடும் யாவும் நன்குக் 
.           கசடறக் கற்க என்றும் 
பெற்றவர் மகிழு மாறு 
.          பெருஞ்செயல் செய்க என்றும் 
நற்றமிழ் நயமாய் ஊட்டி 
.          நலமிகு சான்றோன் ஆக்கும்…………..(5)

சிறுகை கூழினைத் துய்க்க 
.         செறுநர் செருக்கினைப் போக்க 
சிறுமை முழுதாய் நீக்க 
.          சினத்தை அறவே  மாய்க்க ,
வறுமைப் பிணியைப் போக்க 
.         வாழ்க்கை வளமாய் வாழ,
பொறுமை காக்கச் சொல்லும் 
 .       போதனின் கூற்றும் என்னே!  ………….(6)


உற்றதைச் சொல்வ தற்கும் 
.      உள்ளதை உரைப்ப தற்கும் 
நற்றவச் செல்வன் தூய 
.      நனிமிகு தமிழில் செய்த 
சொற்பெருங் குவியல் தன்னைச் 
.      சுடரென ஏந்தி நிற்றல் 
கற்றவர் கைக்கொள் போக்கு, 
.      கருதுவீர் இது நம் வாக்கு. …..(7)

முத்திரை பதித்த வேதம் 
.      முப்பால் மொழிந்த நாதம் 
வித்தகச் சொற்கள் தாங்கி 
.       வியத்தகு ஆற்ற லோடு  
இத்தரை மீதில் வாழும் 
.       இன்னுயிர் முழுவ தற்கும் 
சத்தியக் குறளை யாத்த 
.       சால்பினன் பாக்கள் வாழி!

- கவிஞர்.  லதாராணி பூங்காவனம் எம்.ஏ ., எம்.காம்., 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக