என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு ஓர் கவிதைப் படையல் (கவிதாஞ்சலி)

Image result for karunanidhi
கலைஞரென்னும் காவியந்தான் முடிவு பெற்றது- எமது
      கண்ணிரண்டைக்  குளமாக்கி விட்டுச் சென்றது!
விலையில்லா மாணிக்கம் வீழ்ந்துவிட்டது -தமிழின்
        ஒப்பற்ற சொற்குன்றம் சாய்ந்துவிட்டது!
காரிருளைப் போக்கவந்த பேரொளியாக; அந்தக்
       கருஞ்சட்டைப் பெரியாரின் வளர்ப்பில்  வந்தாய்    .
ஆரியனைப் பொசுக்கிவிடும்   அக்கினிப் பிழம்பை; உன்
       ஆட்காட்டி விரல்வழியே ஒழுகச் செய்தாய்!    

திருக்குறள், தொல் காப்பியத்தைப்  புதுக்கித் தந்து
      தித்திக்கும் இலக்கியத் தேன் பருகத் தந்தாய் 
மறத்தமிழைப் போற்றிய மாப்புலவருக் கெல்லாம்
       மறக்காது சிலைவைக்கும்   மாண்பும் கொண்டாய்   .

ஆர்ப்பரிக்கும் அலைநடுவில் வள்ளுவன் சிலையும்
       அறிவூட்டும் நூலகமும் அண்ணா நினைவும்   
சீர்மிக்க  குலப்பெருமை சாற்றிடும் பல்லோர்
   சிலையோடு, செம்மொழியும் உன்பேர் சொல்லும்! 

பெண்கல்வி, சொத்துரிமை, விவசாயம் மின்சாரம்
       பேருந்து ஓய்வூதியம் உழவருக்குத் தனிச்சந்தை
எண்ணற்ற சாதனைகள் செய்திட்ட செயல்வீரா!  
          என்னாலே ஏலுமோ உன்புகழை எடுத்தியம்ப?

திருநங்கை, மாற்றுத் திறனாளி எனப்புதிதாய்
        அருந்தமிழில் பெயர்சூட்டி  அழைக்கச் செய்தாய்  
பெருநம்பிக்கை அவரிடத்து முளைக்கச் செய்து; புதுப் 
     பொலிவுடனே அவர்வாழ வழியும் செய்தாய்!

மலமள்ளும் மனிதருக்கு மறுவாழ்வும் தந்து 
      உலையரிசி கொடுத்து  வயிர்நிறையச் செய்தாய் 
பலகாலம் பட்டியலில் அடைந்தோர் வாழ்வின்
       பாதுகாப்பை உறுதிசெய்யப் பங்கும்  தந்தாய்.

திறமுரைக்கும் இராவணனின் காப்பிய நூலைச்
           சிறையிட்ட செயல்கண்டு சீற்றம் கொண்டாய்; அந்த  
அறமுரைக்கும் பெருநூலை மீட்டுத் தந்து;நம்  
           ஆதிகுடிப் பெருமைகளைக் முழங்கச்  செய்தாய்!

ஆலயத்துள் அமர்ந்திருக்கும் சிலைகள் தொட்டு  
          அனைவருமே அர்ச்சிக்க வேண்டும் என்ற 
காலங்கள் முன்கண்ட பெரியார் கனவை ;
      கல்லறைக்குள் செல்லுமுன் நிறையக் கண்டாய்! 

எண்பதாண்டுப் பொதுவாழ்வில் வலம்வந்த பேரரசே;
அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்த போர்முரசே!

நுனிநாக்கில் முத்தமிழைச் சிறைவைத்த பெருந்தகையே!
இணையற்ற தமிழ்மகனே!  இறவாத பெரும்புகழே
! திராவிடர்கள் காவலனே!  தூயதமிழ்க்  காதலனே!
உடன்பிறப்பைத் தவிக்கவிட்டு விடைபெற்றுச் சென்றதுஏன்?
நீதந்த பயன்உண்ட தேனீக்கள் அத்தனையும்
"வா!தலைவா" என்றழைத்த ரீங்காரம்  கேட்கலையோ ?
காதுகளை மோதலையோ ? கையிரண்டைத் தீண்டலையோ ?
நாசியினைத் துளைக்களையோ? நரம்பேதும் புடைக்கலையோ ?

திடம்கொண்டு நூறாண்டைக் கடந்திடுவேன் என்றாயே
திடுமென்றுத் தடம்மாறிச் சாய்ந்தாயே எதனாலே?
இடையினிலே தமிழன்னை 'இங்குவா' என்றாளோ?
தடையின்றி அவளழைப்பைத் தலையாலே  கொண்டாயோ?
விடைபெற்று வாவென்று கரம்பற்றிக் கொண்டாளோ
விழிமூட வைத்துஅவள் விழிநனைந்து நின்றாளோ?
நளிதமிழில் நடனமிடும் நகைச்சுவையின் நல்விருந்தே!
நலம்பெற்று வாராது  நிலம்பெற்றுப் போனாயே! தாயாகிக் காத்துவந்த  ஓய்வறியாச் சூரியனே!
ஓயாது உன்நினைவு, ஒருபோதும் சாயாது! உன்கனவு!நீ
விட்டபணி தொடர்ந்திடவும் தொட்டபணி முடித்திடவும்
ஒட்டுமொத்த உடன்பிறப்பும் ஒன்றிணைந்து நின்கின்றோம்!
வென்றுவந்து உனை அடைவோம்!

வாழிய  உன்புகழ்! வாழிய செந்தமிழ்! 


- கவிஞர். லதாராணி பூங்காவனம் .


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக